உலக தேநீர் தினம் - தேயிலை விவசாயிகள் கண்ணீர் தினம்
- Revanth Rajendran
- 5 days ago
- 5 min read
மே 21, உலக தேநீர் நாளாக கொண்டாடப்படுகிறது. சீனா, இலங்கை, இந்தியா ஆகிய பகுதிகளில் மே மாதம் தேயிலை செழித்து அறுவடை காலமாக இருப்பதனால் இந்நாள் உலக தேநீர் நாளாக தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டப்படுகிறது.
உலகெங்கும் தண்ணீருக்கு அடுத்தபடியாக பருகப்படும் பானம் என்றால் அது தேனீரே. உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய அனைவரும் தேநீரை ருசித்திருக்கிறார்கள். அதிலும் 400 கோடிக்கு மேற்பட்டோர் அன்றாடம் தேநீர் பருகுபவர்களாக இருக்கிறார்கள். எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் அதில் தேநீர் விருந்து அமையாமல் இருக்காது. தேனீரை மகிழ்ச்சியோடு ஒப்பிட்டு அதை மக்கள் கொண்டாடுகையில், அதே தேநீரை விளைவிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சியோடு இல்லை என்பது தான் உண்மை.
நீலகிரியும் தேயிலையும்
உலகின் இரண்டாம் பெரிய தேயிலை தூள் உற்பத்தியாளராக இருக்கிறது இந்தியா. அதில் நீலகிரியின் பங்கு அளப்பரியது. நீலகிரி தேயிலை என்றாலே அதற்க்கு உலக மதிப்பு உள்ளது.
பூர்வகுடிகளுக்கும் பழங்குடிகளுக்கும் உரித்தான ஒரு நில நிலப்பரப்பில், பணப்பயிரான தேயிலை பெருகி நிற்பது ஒரு வரலாறே ஆகும். 1000 ஆண்டிற்கு முன் துவங்குகிறது அந்த வரலாறு.
நீலகிரி ஒரு விவசாய பூமி என்பதற்கு தேயிலை காரணமல்ல.
ஆயிரம் ஆண்டிற்கு முன்பிருந்தே நீலகிரியின் பூர்வகுடிகளாகிய படக குடிகள் - கோதுமை, வெந்தயம், கீரை, அபினி, கடுகு, பூண்டு, ராகி, சாமை, தினை மற்றும் பல உணவு பயிர்களை பெரும் அளவில் விவசாயம் செய்து வந்தனர். இந்த விவசாயம் மூலம் உணவு தேவையில் தன்னிறைவு அடைந்த ஒரு குடியாகவே படக குடிகள் இருந்தனர். உணவு பொருட்களை மற்ற பழங்குடிகளோடு பகிர்ந்தும் கூடுதல் உணவை பண்ட மாற்று முறையில் ஈடுபடுத்தியும் வந்தனர். இதுனாலேயே நீலகிரி ஒரு விவசாய பூமியாக இருந்தது. மேலும் அறுவடை காலத்தை குறிக்கும் வகையில் 'தெவ்வ ஹப்பா' கொண்டாடி வந்தனர் பூர்வகுடி படக மக்கள்.
வில்லனாக வந்தான் வெள்ளைக்காரன்
உணவுப்பயிர் விவசாயத்தால் தன்னிறைவு பெற்று உறுதியாய் நின்ற பூர்வகுடிகள், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் நொடிந்து போயினர். தேயிலை உற்பத்திக்கு தகுந்த சூழல் நீலகிரியில் இருந்தது. உலகளவில் பிரபலம் அடைந்து கொண்டிருந்த தேநீரை, நீலகிரியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டனர் ஆங்கிலேயர்கள். முறையே 1846ஆம் ஆண்டு தேயிலை நீலகிரியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்க்கு முன்பே 1838இல் காப்பி அறிமுகம் செய்யப்பட்டது. படக மக்களின் பூர்வீகமாக இருந்த வனம் மற்றும் விவசாய நிலங்கள் பெருமளவில் பறிக்கப்பட்டு, தேயிலை நாற்றுகள் பயிரிடப்பட்டன. பல்லாயிரம் ஏக்கரில் அமையவுள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்ற உழைப்பாளர்கள் தேவைப்பட்டதால், மலை தேசத்தை சுற்றியிருந்த தேசங்களிலிருந்து ஆட்கள் அழைத்துவரப்பட்டனர். அவ்வாறே, இலங்கை, மலேஷியா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கு செந்தமிழ் தேசத்தின் மக்கள் அழைத்து செல்லப்பட்டது போல, நீலகிரிக்கும் செந்தமிழ் தேசத்தின் மக்கள் அழைத்துவரப்பட்டனர்.
அதே வேளையில் உணவு பயிர்கள் பிரதானமாய் இருந்த படக மக்களின் விவசாய முறை, மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு, தேயிலை விவசாயம் பெருகியது. அதோடு நில்லாமல், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளும் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் ஆங்கிலேயர்களின் தேவைக்காகவே. சிறது காலத்தில் படக குடிகளின் பூர்வீக உணவு பயிர் விவசாயம் அழிக்கப்பட்டது.
வணிகமான நீலகிரி
அன்று துவங்கி இன்று வரையிலும் தேயிலையோடு மக்கள் போராடி வருகிறார்கள். 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரையிலும் பூர்வீக உணவு பயிர் விவசாயத்தை மீட்டெடுக்க முடியவில்லை. சுதந்திரத்திற்கு பிறகும் தேயிலை விவசாயம் தொடர்ந்தது. 1947 வரை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல தேயிலை தோட்டங்கள், நியாயப்படி நீலகிரியின் குடிகளின் கைகளுக்கே திரும்பி இருக்க வேண்டும். ஆனால் பெரும் முதலாளிகளின் கைகளுக்கு அவை சென்றன. அன்று முதலே நீலகிரி என்பது 'விவசாய பூமியாக’ அல்லாமல், ‘உயிர்கோளக் காப்பகமாக’ அல்லாமல், வெறுமனே வணிக நிலமாக பார்க்கப்பட்டு வருகிறது. இன்று வரையிலும் நீலகிரி ஒரு விவசாய பூமி, உயிர்கோளக் காப்பகம் என்னும் உண்மையை புறம் தள்ளி, இது ஒரு சுற்றுலா தளம் என்னும் பொய்யை பின்ன பல சதிகள் இங்கு தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.
நீடித்த வருமை
முறையே தொடர்ந்தது மக்களின் வருமை போராட்டம். நீலகிரி மக்களின் வாழ்வாதாரம் வறுமையிலேயே தொடர்ந்தது. 1991இல் சோவியத் ருசியாவின் வீழ்ச்சிக்குப்பிறகு, தேயிலையின் விலை மேலும் குறைந்து, இன்னல்கள் பெருகின.
உரிய விலையில்லா தேயிலை
முப்பது ஆண்டுகளாக பசுந்தேயிலையின் விலை ஒரே படிக்கட்டில் நிற்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?
அதுதான் உண்மையும் கூட. 1995-96 காலத்தில் ₹18-19 ஆக இருந்தது பசுந்தேயிலையின் விலை. அதே விலை தான் இன்று வரையிலும் தொடர்கிறது. 1995திலும் 19 ருபாய், 2025திலும் 19 ருபாய். அநியாயத்தின் உச்சக்கட்டம் என்றால் அது பசுந்தேயிலையின் விலை என்று கூறலாம்.
வாழ்வாதாரமே இழந்து நிற்கும் மக்களுக்கு, தேயிலை உற்பத்தி விலையைவிட குறைவான விலையையே, அரசு தந்துகொண்டிருக்கிறது.
2014இல் பெங்களூரில் அமைந்துள்ள IIPM - Indian Institute of Plantation Management இன் ஆராய்ச்சியின்படி பசுந்தேயிலையின் உற்பத்தி செலவு, அதாவது பசுந்தேயிலையை பறித்து தொழிற்சாலைக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கான செலவு மட்டும் ₹14.50 - ₹17.50 ஆக இருந்தது
2022 தோட்டக்கலை துரையின் குறிப்பு படி தேயிலையின் உற்பத்தி விலை, ₹22.39 என இருந்தது.
தற்போது 2025 இல் பசுந்தேயிலையின் உற்பத்தி செலவு 25 ரூபாயை தாண்டுகிறது.
விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கும் வேலையில், காலம் மாறிக்கொண்டே இருக்கும் வேளையில், 30 ஆண்டுகளாக பசுந்தேயிலைக்கான விலை மட்டும் உயராமல் இருப்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி, விவசாயிகளின் வாழ்வில் இன்னலுக்கு மேல் இன்னல்.
மனசாட்சி இல்லாத அரசு.
1995 இல் கிடைத்த ஊதிய தொகையை வைத்துக்கொண்டு 2025இல் வாழ முடியுமா?
1995 ஊதியத்தை தான் ஆசிரியர்கள் இன்றும் வாங்கி வருகிறார்களா?
1995 ஊதியத்தை தான் அரசு ஊழியர்கள் இன்றும் வாங்கி வருகிறார்களா?
1995 ஊதியத்தை தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் வாங்கி வருகிறார்களா?
1995 ஊதியத்தை தான் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றும் வாங்கி வருகிறார்களா ?
சென்ற ஆண்டு ஊதிய உயர்வு வாங்கினாலும் இந்த ஆண்டிற்கு அது பத்தவில்லை என கூறி, போராட்டங்களே இங்கு வெடிக்கின்றன. விலைவாசிக்கு ஏற்றாற்போல் ஊதியத்தை உயர்த்தி தான் ஆகவேண்டும்
ஆனால் 30 ஆண்டுகளாக ஒரே விலையை தான் தேயிலை விவசாயிகள் பெற்று வருகிறார்கள். வாழ்வை மேம்படுத்த முடியாமல் பூர்வீக நிலங்களை விற்றும், இதர வேலைககுக்கு சென்றும், வளர்ச்சி இல்லாத ஒரு வாழ்வையே தேயிலை விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள்.
போராட்டம்! வெறியாட்டம்
பூர்வகுடியின் உரிமையை வேண்டியும் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும் பெரும் போராட்டங்களும் நீலகிரியில் நடந்தாயிற்று.
1989இல் ஒத்தகெயில் நடந்த போராட்டத்தில் பூர்வகுடிகள் எழுச்சியோடு திரண்டனர், அந்த எழுச்சியை பறைசாற்றவே அந்த போராட்டம் நடைபெற்ற மே 15 ஆம் நாள் படக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறகு நடந்தது ஒரு மாபெரும் எழுச்சி. 28.07.2000 அன்றும் பெரும் திரளாக மக்கள் ஒன்று கூடி தேயிலைக்கு உரிய விலைவேண்டி போராட்டம் நடத்தினர். போராட்டத்தை எதிர்கொள்ள இயலாத அன்றைய கருணாநிதி அரசு, காவல்துறையின் வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டது. போராடிய மக்கள், ஆண் பெண் என அனைவரும் அடி உதைக்கு ஆளானார்கள். உயிரை காப்பாற்ற ஓடினர். குடியின் மூத்தவர்கள் பலர் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க வனத்திற்குள் ஓடி, இரவெல்லாம் வனத்திற்குள் காத்திருந்து உயிர்பிழைத்து வந்தனர்.
மனதை உறையவைக்கும் சம்பவம் என்றால் - குடியின் மூத்தவர்கள் பலரை அரைநிர்வாணமாக நிறுத்தி அடித்து நொறுக்கியது அன்றைய காவல்துறை. காவல்துறையிடம் அடிபட்ட பலர், கை கால்கள் உடைந்து, இறுதிவரை ஊனத்தோடு வாழ்ந்து, பின் தெய்வமானார்கள். இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய செய்தி யாதனின், உரிமைக்கான போராட்டத்தில், அடக்குமுறையை எதிர்த்து நின்ற பூர்வகுடியின் மூத்தவர்கள் பலர் இன்றும் நமது சமகாலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எதிர்கால தலைமுறைக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை பெற்று தர வேண்டும் என்ற எண்ணத்தில் நடந்தது அந்த போராட்டங்கள்.

அடிப்படை வாழ்வாதாரத்தை வேண்டி நின்ற மக்களை, அதிகாரவர்கத்தின் வெறியாட்டத்திற்கு உள்ளாக்கியதை தலைமுறைகள் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.
உழைப்பிற்கான உரிமையை மறுப்பது ஏன்?
பன்னாட்டு சந்தை ஆராய்ச்சி நிறுவனமான MRFR (Market Research Future) அறிக்கையின்படி, சர்வதேச தேநீர் சந்தையின் மதிப்பு சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாயாகும். இதுவே 2033இல் 5.8 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என அவ்வறிக்கை கூறுகிறது.
தேநீரின் தேவையும் மதிப்பும் குறையாமல் வளர, பசுந்தேயிலையின் விலை மட்டும் 30 ஆண்டுகளாக ₹19லேயே நிற்பது ஏன்? இதே நீலகிரியில் தனியார் பெருமுதலாளிகள் தேயிலை வியாபாரத்தில் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் நிலையில், சிறு குறு பசுந்தேயிலை விவசாயிகளுக்கு 1995 விலையிலேயே நிற்பது ஏனோ?
அடிப்படை ஆதார விலை
தேநீருக்கான சர்வதேச சந்தை வளர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தாராளமாக அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்யலாம். இந்த விவசாயிகள் யாவரும் தனித்தனியே தொழிற்சாலை வைத்து தேயிலை தூள் உற்பத்தி செய்வதில்லையே. அனைவரும் ஒன்று கூடி ஆங்காங்கே அமைக்கப்பெற்ற தேயிலை தொழிற்சாலைகளில் தானே சேர்க்கிறார்கள். அதுவும் 30000 சிறு குறு தேயிலை விவசாய உறுப்பினர்களை கொண்ட, இண்டிகோ செர்வ் கூட்டுறவு தொழிற்சாலையில் தானே பசுந்தேயிலையை சேர்க்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் கரும்பிற்கு தருவது போல் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை தருவதில் என்ன தவறு இருக்கிறது. அரசு இதை பற்றி பேசுவதோடு சரி, இன்னும் நூறு கோடி நிலுவை தொகையை தராமல் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது இன்றைய அரசு.
இதற்கிடையில் 1980களில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தை உருவாக்கியது செந்தமிழ் நாட்டின் அரசு. அது இன்று ஊழியர்களுக்கு ஊதியம் கூட தர முடியாத நிலையில் பெரும் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. தேயிலை விவசாயத்தில் உரிய கவனம் இல்லாமல், பல ஆண்டுகள் ஒரே துறையில் பணியாற்றியும் பிரச்சனைகளை சரி செய்யாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை வைத்துக்கொண்டு, எவ்வாறு இந்த அரசு தேயிலை விவசாயிகளுக்கு நல்லதை செய்யும்?
அனைத்தைம் இழக்கும் நிலையில் பூர்வகுடிகள்.
தாங்கள் உருவாக்கிய மண்ணிலேயே பல இகழ்ச்சிகளை தாங்கி நிற்கின்றனர் படக பூர்வகுடிகள். உழைக்கும் பலம் இருந்தும், உழைப்பதற்கான உந்துதல் இருந்தும், அந்த உழைப்பிற்கான உரிய மரியாதை கிட்டாமல், மலை தேசத்தை விட்டு வெளியேறி வேலைசெய்யும் நிலைக்கு பூர்வகுடிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வறுமையில் சிக்கிய பலர் செய்வதறியாமல் பூர்வீக நிலங்களை, நீலகிரியை வணிகமாக பார்க்கும் வெளியூர் முதலாளிகளுக்கு விற்று செல்கின்றர்.
பாரம்பரிய உணவு பயிர் விவசாயத்தை இழந்து, பசுந்தேயிலைக்கு உரிய விலையில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து, இறுதியில் பூர்வீக நிலத்தையும் பறிகொடுத்து நிற்கும் நிலையில் தான் பூர்வகுடிகள் உள்ளனர். பசுந்தேயிலைக்கான அடிப்படை ஆதார விலைக்குறித்து பேச்சுக்கள் வருகிறதே தவிர, அரசிடமிருந்து எந்த ஒரு செயல்பாடும் தெரியவில்லை.
இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதே ₹19 ரூபாய் தொடரப்போகிறதோ? என்றைக்கு உரிய விலை கிடைக்கபோகிறதோ? பசுந்தேயிலைக்கான உரிய விலை கிடைக்கும் முன் பூர்வகுடிகள் நிலங்கள் முற்றிலுமாக பறிபோகும் அபாயம் கண்ணுக்கு தெரிகிறது
மலை தேசத்தை சாராத அரசியல்வாதிகளுக்கு இந்த பிரச்சனை புரிய வாய்ப்பில்லை. பூர்வக்குடியை சார்ந்த அரசியல்வாதி சொந்தங்களுக்கு இதன் ஆழம் புரிந்திருக்கவேண்டும். ஆகவே, இதுபோன்ற உரிமை சார்ந்த பிரச்சனைகளில் அவரவர் சார்ந்த கட்சிக்கு விசுவாசமாக இல்லாமல், பிறந்த குடிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அதுவே அழகு.
எது ஆனாலும், தேயிலை விவசாயிகளின் உழைப்பிற்கான மரியாதை கிடைக்கும் வரை போராட்டம் நிற்காது. பூர்வகுடிகளை வறுமையில் தள்ளி நிலங்களை அபகரிக்கலாம் என்ற சதி ஏதேனும் இருந்தால், அதுவும் நிறைவேறாது.
இறுதியாக உலகம் வேண்டுமானால் தேநீர் தினம் கொண்டாடட்டும். உரிய விலை கிடைக்கும் வரை, நீலகிரியில் மே 21 - தேயிலை விவசாயிகளின் கண்ணீர் தினமாக கொண்டாடப்படட்டும்.
இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் வீணாக போய்விட்டது